]]>

Breaking News

வைரமுத்து >> கோடைக் குளிர்நகர் | AUDIO


கோடைக் குளிர்நகர்

முகிற்குடையின் கீழுறங்கும் சோலை - புல்லில்

முத்தமிடும் பனிமுத்து மாலை - பனித்

துகில்விலக்கிப் பூவழகைச் சுவையாகச் சொல்லத்தான்

சுகமாக விடியுமதி காலை - அதைச்

சொல்லாமல் எனக்கென்ன வேலை?


பொற்சுவட்டுப் பூப்பூமி மீது - மெல்லப்

பூத்த பனி திரைபோடும் போது - நெஞ்சம்

சொற்கனவுப் பந்தலுக்குள் சொக்கிநட மாடிதினம்

சொல்லிவிடும் கற்பனைக்குத் தூது - அதைச்

சொல்லிவைக்க வார்த்தை கிடையாது.


மீனேறி நிலம்பார்க்கும் ஏரி - சுற்றி

மின்வெளியாய் நின்றமலர்ச் சேரி - அங்கே

தேனேறி, தென்றலெனும் தேரேறிப் பனித்தளிர்கள்

திசைபார்க்கும் வரவேற்புக் கூறி - ஆடும்

செந்தோட்டம் மனத்தேரில் ஏறி.


கலைக்கோட்டத் தேனடைகள் பிழிந்து - மெல்லக்

கனித்தோட்டச் சாலைகளில் வழிந்து - அந்த

மலைமேட்டு மலர்ப்பள்ளம், மழைமேகப் பனிவெள்ளம்

மதுபோலச் சொரிவதனால் குளிர்ந்து - பச்சை

மணிபோலச் சிரித்திருக்கும் ஒளிர்ந்து





கருத்துகள் இல்லை