]]>

Breaking News

வைரமுத்து எழுதிய மழைக்குருவி கவிதை | Tamil Audio LIbrary

மழைக்குருவி


நீல மலைச்சாரல் - தென்றல்

நெசவு நடத்துமிடம்

ஆல மரக்கிளைமேல் - மேகம்

அடிக்கடி தங்குமிடம்      


எந்திர ஓசைகளைக் - கழற்றி

எங்கோ எறிந்துவிட்டு

மந்திரம் போட்டதுபோல் - ஒரு

மெளனம் வசிக்குமிடம்


கட்டடக் காடுவிட்டு - நிழல்

கனிகின்ற காடுவந்தேன்

ஒட்டடை பிடித்தமனம் - உடனே

உட்சுத்தம் ஆகக்கண்டேன்


வானம் குனிவதையும் - மண்ணை

வளைந்து தேடுவதையும்

காணும் பொழுதிலெல்லாம் - ஒரு

ஞானம் வளர்த்திருந்தேன்


வெவ்வேறு காட்சிகளால் - இதயம்

விரிவு செய்திருந்தேன்

ஒவ்வோர் மணித்துளியாய் - என்

உயிரில் வரவுவைத்தேன்


சிட்டுக் குருவியன்று - ஒரு

சிநேகப் பார்வை கொண்டு

வட்டப் பாறையின்மேல் - என்னை

வாவென்றழைத்தது காண்


மொத்தப் பிரபஞ்சமும் - என்

முன்னே அசைவதுபோல்

சித்தப் பிரமைகொண்டு - அந்தச்

சிட்டை ரசித்திருந்தேன்


அலகை அசைத்தபடி - அது

ஆகாயம் கொத்தியதே

உலகை உதறிவிட்டுச் - சற்றே

உயரப் பறந்ததுவே


பறக்க மனமிருந்தும் - மனிதன்

பறக்கச் சிறகுமில்லை

இறக்கை துடிக்கையிலே - என்

இமைகள் துடிக்கவில்லை


சொந்தச் சிறகுகளில் - வானைச்

சுருட்டி எடுத்துக் கொள்ளும்

இந்தக் குருவியினும் - மனிதன்

எங்ஙனம் உயர்ந்துவிட்டான்?


கீச்சுச் கீச்சென்றது - என்னைக்

கிட்ட வாவென்றது

பேச்சு மொழியின்றியே - என்மேல்

பிரியமா என்றது


அறிவுக்கு விரிவுசெய்ய - மனிதர்

ஆயிரம் மொழிகாண்பினும்

குருவிக்கு விடையிறுக்க - ஒரு

குறுமொழி கண்டதுண்டா?


ஒற்றைச் சிறுகுருவி - நடத்தும்

ஓரங்க நாடகத்திலே

சற்றே திளைத்திருந்தேன் - காடு

சட்டென்று இருண்டதுகாண்


மேகம் படைதிரட்டி - வானை

மிரட்டிப் பிடித்ததுகாண்

வேகச் சுழற்காற்று - என்னை

விரட்டியடித்துது காண்


சிட்டுச் சிறுகுருவி - பறந்த

திசையும் தெரியவில்லை

விட்டுப் பிரிந்துவிட்டேன் - விரைந்து

வீட்டுக்கு வந்துவிட்டேன்


வானம் தாழ்திறந்து - இந்த

மண்ணில் வீழ்ந்ததென்ன

காணும் திசைகளெல்லாம் - மழையில்

கரைந்து போனதென்ன


மின்னல் பறிக்குதென்று - சாரல்

வீட்டில் தெறிக்குதென்று

ஜன்னல் அடைத்துவைத்தாள் - மனைவி

தலையும் துவட்டிவிட்டாள்


அந்தச் சிறுகுருவி - இப்போ(து)

அலைந்து துயர்ப்படுமோ?

இந்த மழைசுமந்து - அதன்

இறக்கை வலித்திடுமோ?


காட்டு மழைக்குருவி - போர்த்தக்

கம்பளி ஏதுமில்லை

ஓட்டை வான்மறைக்க - அதன்

உயரே கூரையில்லை


கூடோ சிறுபுதரோ - இலைக்

குடைக்கீழ் ஒதுங்கிடுமோ?

தேடோ தேடென்று - இடம்

தேடி அலைந்திடுமோ?


பெய்யோ பெய்யென்று - மழை

பெய்தால் என்ன செய்யும்

அய்யோ பாவமென்று - குருவி

அழுவதை நினைத்திருந்தேன்


காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த

கதையே வேறுவிதம்

கூட்டை மறந்துவிட்டுக் - குருவி

கும்மியடித்ததுகாண்


வானப் பெருவெளியில் - கொட்டும்

மழையில் குளித்ததுகாண்

கானக் கனவுகளில் - அது

கலந்து களித்ததுகாண்


சொட்டும் மழைசிந்தும் - அந்தச்

சுகத்தில் நனையாமல்

எட்டிப் போனவனை - அது

எண்ணி அழுதது காண்




கருத்துகள் இல்லை